Saturday 17 October 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --6

" தென்றல் " பத்திரிகையில்  ராசி-விஷ்ணு  தம்பதி

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --5 படிக்க இங்கே கிளிக்கவும்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் " தென்றல் " மாத இதழில் ராசி-விஷ்ணு   தம்பதியினர்  டிஷ் வாஷருடன் செய்த  அலப்பறை  இம்மாதம் வெளியாகியிருக்கிறது.

சிரிக்க சிந்திக்க  என்கிறப் பிரிவில் ," என்ன சத்தம் இந்த நேரம்" என்கிறத்  தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.

என் நெடுநாளையக் கனவைப் பூ ர்த்தி செய்த தென்றல் இதழிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் படித்து உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

                                                                                

ராசி இரவு சாப்பிட்டு விட்டு, படுக்கக்  கிளம்பியவள், மருமகள் ஆர்த்தி  டிஷ் வாஷரில்  எல்லா சாமான்களையும் போட்டு விட்டு  பட்டனை அமுக்கி விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

சற்று நேரம் டிஷ் வாஷரையே  பார்த்துக் கொண்டிருந்தாள்  ராசி. " இந்த ஊரில்(அமெரிக்காவில்) இருப்பதைப் போல் நம் ஊரில்  'டிஷ் வாஷர்' இன்னும் ஏனோ பிரபலமாகவில்லை. அதனால் தான் வாங்க யோசனையாயிருக்கிறது .பிரபலாமாகியிருந்தால், பாத்திரம் துலக்க  இந்த அஞ்சலைக்காக, நாம் வழி மீது விழி வைத்துக் காத்திருக்க வேண்டியிருக்காதே "  என்று நினைத்துக் கொண்டே  ஆ........வ்...........என்று பெரிதாகக்  கொட்டாவி  விட்டாள் .

திடீரென்று கும்...கும் .....என்று மெலிதான சத்தம் கேட்டது.
" என்ன சத்தம் இது ?" என்று ராசி கேட்க,
ஆர்த்தியோ , நிதானித்துக் கூர்ந்து கவனித்து விட்டு ," ஒன்றுமில்லையே மாமி " என்று சொன்னாள் .

" ஓ .......நம் வயிறு தான் ஒரு மாதிரி சத்தம் போடுகிறதோ?
இன்றைக்கு என்ன சாப்பிட்டோம்? வயிறு " ஒரே கடமுட " என்கிறதே என்று  நினைத்துக் கொண்டு  நல்ல சூடாக ஒரு டம்ளர் வெந்நீரை  குடித்து  விட்டுப் படுக்கக் கிளம்பினாள் .

மறு நாள், ஞாயிற்றுக் கிழமைப்  பொழுது விடிந்ததும் , காபிக்  கலந்து தானும் குடித்து விட்டு விஷ்ணுவிற்கும்  கொடுத்து விட்டு,  ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே, காபியை சுவைக்க ஆரம்பித்தாள் .

திடீரென்று நினைவிற்கு வந்தது "ஆமாம்...... நேற்றிரவு நமக்கு வயிறு சற்று மந்தமாக இருந்தாற் போலிருந்ததே. அப்பாடி ......இப்பொழுதாவது  சரியாகி தொலைத்ததே  " என்று நிம்மதியானாள்  ராசி. வெந்நீர்  நன்றாகவே  வேலை செய்திருக்கிறது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்  ராசி.

அதற்குப் பிறகு அவளுக்கு எதைப் பற்றியும் நினைக்க நேரமில்லை . அன்றைக்கு  ராஜேஷ் அவனுடைய நண்பர் குமாரை மதிய உணவிற்கு  வரவழைத்திருந்தான். அதற்காக ஆர்த்தியும் அவளுமாக சேர்ந்து  காய்கறிகளை நறுக்கவும், சமைக்கவும்  என்று சுறு சுறு ப்பாக  நாள் ஓடிக் கொண்டேயிருந்தது.

மதிய விருந்திற்கு வந்த  நண்பர் குமார் ரசித்து ,ருசித்து சாப்பிட்டு முடித்தார்.

குமார் சாப்பிட்டு முடித்து விட்டு," அம்மா.... உங்கள் சமையல் சூப்பர்.  இந்த மாதிரி சமையலை சாப்பிட்டு,  எத்தனை மாதங்களாகி விட்டன. நான் சென்ற வருடம் ஊருக்குப் போயிருந்த போது  அம்மா கையால் சமைத்து  சாப்பிட்டது. பிறகு இப்ப தான் அதே சுவையுடன்  சாப்பிடுகிறேன். அதுவும் உங்கள் அவியலுக்கு  ஈடு இணையே இல்லை எனலாம். " என்று சொல்லவும்  ராசிக்குப்  பெருமை பிடிபடவில்லை.

அதற்குள் விஷ்ணு," குமார், அதான் நீங்களே  சொல்லி விட்டீர்களே. வீட்டு சாப்பாடு சாப்பிட்டு  பல மாதங்களாகி விட்டன என்று. அதனால் தான் சாதாரண சமையல் கூட உங்களுக்கு  சூப்பர் சமையலாகி விட்டது "என்று  சொல்லவும்,
ராசி, விஷ்ணுவைப் பார்த்து ஒரு முறை முறைத்தாளே  பார்க்கணும். ஆனால்  விஷ்ணு,... ம்ஹூம்....இதற்கெல்லாம்  அவர் பயந்து விடுவாரா என்ன? கண்டு கொள்ளாமல்  நகர்ந்தார்.
பிறகு எல்லோருமாக அருகிலிருக்கும் Menlo  parkற்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது மணி எட்டரை ஆகியிருந்தது..

வீட்டிற்கு வந்ததும்  இரவு உணவு முடிந்ததும்  மீண்டும் டிஷ்வாஷரில்  பாத்திரங்களை அடுக்கி, ஆர்த்தி ஸ்விட்ச்சை ஆன் செய்வதைப்  பார்த்தாள்  ராசி.

"நாளையிலிருந்து நானே   இந்த வேலையே செய்கிறேன்  ஆர்த்தி"  சொல்லி முடிக்கவில்லை,
" திரும்பவும்  வயிறு "கடமுட" என்பது போல் இருந்தது. அவியல் நமக்கு ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. வயதாவதின்  அறிகுறி இது என்று  நினைத்துக் கொண்டாள் . மீண்டும் ஒரு டம்ளர்  வெந்நீர் உள்ளே இறங்கியது.

சில வினாடிகளில் வயிறு உறுமல் அடங்கி விட்டது.

" ராசி நல்ல கை வைத்தியம் உன் வசம்." என்று தன்னைத் தானே மெச்சிக் கொண்டே   தூங்கி விட்டாள்  ராசி.

ஆனால் அவள் வயிறு  அப்படியெல்லாம் அவளை விட்டு விடவில்லை.மறு நாள்  மீண்டும் வயிறு ஓலமிட ஆரம்பித்தது.

மீண்டும்  வெந்நீர் வைத்தியம். பிறகு தூங்கச் சென்றாள் .

" இன்றைக்கும் உனக்கு வயிறு பிரச்சினையோ" என்று படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து  கண்களை எடுக்காமலே நக்கலாக விசாரித்தார் விஷ்ணு.

" ஆமாம் ஆனால் சரியாகி விடும்" சொன்ன சிறிது நேரத்தில், சன்னமான குறட்டை ஒலி   கிளம்பியது ராசியிடமிருந்து.

மறு நாள் காலை மணி ஆறு இருக்கும் . ராசி எழுந்து குளிர்ந்த நீரில் பல் துலக்கி விட்டு  , காபி போடக்  கிச்சனிற்குள்  நுழைந்தாள் .

காலை வைத்ததுமே , காலில் 'கொழ கொழ' என்று தட்டுப் பட , லைட்டைப் போட்டு  என்னவென்று பார்த்தாள்  ராசி.

புஸ்...புஸ் என்று நுரைத்  தள்ளிக்  கொண்டு   இருந்த  டிஷ் வாஷர், பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"ராஜேஷ்......" இரைந்தாள் ராசி.

"இங்கே வந்துப் பாருடா. டிஷ் வாஷர்  ரிப்பேர்  போலிருக்கிறது.
'மாந்தம்' வந்தாற்  போல் நுரை தள்ளி, வாந்தி எடுத்து வைத்திருக்கிறது பார்."

 கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த விஷ்ணு ," அட.....மாந்தம் என்று சொல்லாதே. நீ தானே நேற்று 'ஆன்' செய்தாய்?  சரியாக செய்யவில்லையோ என்னமோ  ? அதான் உன்  தொல்லைத் தாங்காமல்  டிஷ் வாஷர் தற்கொலை முயற்சியில் இறங்கி விட்டதோ?" நக்கலடித்துக் கொண்டே அருகில் போக முயற்சிக்க

 ராசியோ," இந்த ரணகளத்திலும்  என்னை வம்புக்கு இழுக்கவில்லைன்னா .....  உங்களுக்குத் தூக்கம் வராதே.  " சொல்லிக் கொண்டே விஷ்ணுவைப் பார்த்து   " வேண்டாம்.....வேண்டாம்.....இங்கே வராதீர்கள் . வழுக்குகிறது. " என்று கத்திக்  கொண்டே  அடுத்த அடி எடுத்து வைக்கவும், சர்ரென்று சறுக்கிக்........................ கொண்டே. சுவற்றைப் பிடித்துக் கொண்டு   கீழ் அமர்ந்து விட்டாள்  ராசி.

விஷ்ணுவை ஜாக்கிரதையாக இருக்க சொன்னவள் தானே விழப் பார்த்தாள் .
நல்ல வேளை  விழவில்லை ராசி. சமாளித்துக் கொண்டாள்.

பதறியடித்துக் கொண்டு வந்த, ராஜேஷும், ஆர்த்தியும், ராசியை மெதுவாகக் கைத்தாங்கலாகப் பிடித்து  சோபாவில் அமர வைத்தனர்.பிறகு இருவருமாக சேர்ந்து கிச்சனை  சுத்தம் செய்து விட்டு, பாத்திரத்தையெல்லாம்  சுத்தம் செய்தனர்.

பின்னர்  டிஷ் வாஷர்  ரிப்பேர்  செய்பவருக்கு போன் செய்து விட்டு, " அம்மா , டிஷ் வாஷர் ரிப்பேர் செய்பவர் வந்து ரிப்பேர் செய்து விட்டுப் போவார். உன்னால்  சமைக்கக் முடியுமென்றால்  சமைத்து  சாப்பிடுங்கள் "

" ரொம்பவும்  அலட்டிக்காதே  அம்மா. கீழே  விழப் பார்த்தாய்  . ஜாக்கிரதை." பிறகு அப்பாவைப் பார்த்து," இல்லைன்னா  நீங்களே  தோசை வார்த்து விடுங்களேன் அப்பா."

என்று ஆயிரம் ஜாக்கிரதைகள் சொல்லி விட்டு , "நானோ , இல்லை ஆர்த்தியோ சீக்கிரமே வந்து விடுகிறோம் ." என்று சொல்ல, ஆர்த்தி பங்கிற்கு அவளும் " ஜாக்கிரதை " என்று சொல்லி விட்டுப் போனாள்.

ராசிக்கு அடி எதுவும் படவில்லை. அவள் சுருக்கமாக சமையலை செய்து முடிக்கவும், மெல்லிசையாய்  வாசல் மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது. கதவைத் திறந்தாள் ராசி.

ஆஜானுபாகுவாய் ஒரு மனிதர் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது.

யார் ? என்பது போல் ராசி அவரைப் பார்க்கவும்,  அவரோ  ராஜேஷ் பெயரைச் சொல்லி உறுதிப் படுத்திக் கொண்டு , டிஷ் வாஷர்  ரிப்பேர்  செய்ய வந்திருப்பதாக சொன்னதைப்  புரிந்து கொண்டு அவரை உள்ளே விட்டனர்.

ராசிக்கு நம்பவே முடியவில்லை." ரிப்பேர் செய்பவர்....... காரிலா..........? "

"இருக்காது...... கடை ஓனராக இருக்கும். ! அதான் அக்கறையுடன் காரில் வந்து விட்டார் போலிருக்கிறது "  என்று ராசி நினைத்துக் கொண்டாள் . (இங்கிருக்கும் பெரும்பான்மையோருக்கு கார்  தான்  போக்குவரத்திற்கு என்பது  அப்போது ராசிக்குத்  தெரிய நியாயமில்லை.). " அமெரிக்காவில் கார் வைத்திருப்பவரெல்லாம்  முதலாளியாயிருக்க வேண்டிய அவசியமில்லை " என்கிறப் பேருண்மைப் புரிய சில நாட்களானது.

 அந்த ஆஜானுபாகு மனிதர் பின்னால் சென்றனர் ராசி விஷ்ணு தம்பதி. அவர்  டிஷ் வாஷர் அருகில் போய்  தன்  பெரிய  பையைத் திறந்து , அதனுள்ளிருந்து ஏதேதோ  உபகரணங்களை  எடுத்து  டிஷ்வாஷரின் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்..

பிறகு  தடாலென்று  ராசியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நெடுஞ்சாண்கிடையாக கீழே டிஷ் வாஷர் அருகே படுக்கவும், அருகில் நின்றுக் கொண்டிருந்த ராசியோ  பதறி நகர்ந்தாள் . அதை சற்றும் லட்சியம் செய்யாமல்  டிஷ் வாஷரின்  அடிப் பாகத்தில் ரிப்பேர்  செய்ய ஆரம்பித்தார் அந்த மகானுபவர். .  ஒரு  மணி நேரத்திற்கு மேலானது ரிப்பேர்  செய்து முடிக்க .

நடுவில் ராசிக்கு,  இவர் பாட்டிற்குக் காலை  நீட்டிப் படுத்துக் கொண்டு,  டிஷ் வாஷர் ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி, என்று தூங்கி விட்டாரோ  என்கிற சந்தேகம் கூட வந்தது. எழுப்பலாம் என்றால் எப்படி எழுப்புவது என்று குழம்பிய நேரத்தில்,   நல்ல வேளை  அவரே   எழுந்து , டிஷ் வாஷரை  ஆன் செய்து விட்டு  வேலை செய்கிறது என்று சொல்லி விட்டு 'பில்' எழுத ஆரம்பித்தார்.

ராசி தானே அதை  ஆன் செய்து ,ஓடுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் .
அதைப் பார்த்த ஆஜானுபாகு மனிதர் ,எழுதிக் கொண்டிருந்ததை விட்டு விட்டு ,விறு விறு என்று அருகில் வந்தார்  .

வந்தவர் டிஷ் வாஷரை  ராசியை விட்டே ஆன் செய்ய சொல்லி , அழுத்தி மூடினார் .
பிறகு................? என்பது போல்  அவரையே ராசி பார்க்க . டிஷ் வாஷர்  மேடை மேல்  காதை  வைத்து சத்தம் வருகிறது பார் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

சத்தமா.....குழம்பிக் கொண்டே காதை  வைத்தாள்  ராசி.

பில்  வாங்கிக் கொண்டு  அவரை அனுப்பிய விஷ்ணு, ராசி என்ன செய்கிறாள்  என்று பார்க்க வந்தார்.
ராசியோ ,காதை டிஷ் வாஷர் மேடை மேல்  வைத்துக் கேட்டு விட்டு ,
"அட  .......இங்கிருந்து தான் "கடமுடா" சத்தம் வருகிறதா?"என்று  சத்தமாக  (தனக்குள்)சொல்லிக் கொண்டிருந்தாள்  .

" வேறு எங்கிருந்து வருவதாய் நீ நினைத்துக் கொண்டிருந்தாய் ? " விஷ்ணு கேட்க

' ஒன்றுமில்லை ' என்று பதில் வந்தது ராசியிமிருந்து.

"உண்மையை சொல்வானேன்.  அதுவும் இவரிடம் ......சொல்வது, பிட் நோட்டீஸ் அடித்துப் நியுஸ் பேப்பர் நடுவில்  வைத்து வீடு வீடாக  விநியோகிப்பதற்கு சமம்  "நினைத்துக் கொண்டாள் ராசி)

விஷ்ணுவிற்கு உண்மைப்  புரியவில்லையோ.......
ஆனால் உங்களுக்குப் புரிந்திருக்குமே.

18 comments:

  1. ஆகா... எல்லாப் பக்கமும் ராசி - விஷ்ணு!..
    கொடி கட்டிப் பறக்கட்டும்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. ராசி-விஷ்ணுவின் புகழ் அமெரிக்காவிற்கும் எட்டிவிட்டதே! அந்த தம்பதிக்கும் அவர்களை தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கும் நல்வாழ்த்துகள், ராஜி! தொடர்ந்து உற்சாகத்துடன் எழுத ஆரம்பியுங்கள், ராஜி!

    ReplyDelete
  4. ஒரு சமாசாரம் மட்டும்.
    நான் அமெரிக்காவில் என் பொண்ணு வீட்டில் கற்றுக்கொன்ட்டேன்.
    டிஷ் வாஷரில் சாப்பிட்ட பாத்திரங்களை அப்படியே போடக் கூடாது.
    நன்றாக அலம்பி கழுவி, சோப் போட்டு பிறகு பைப்பில் காண்பித்து, பிறகு தான் டிஷ் வாஷரில் போடவேண்டும்.
    இல்லையேல், டிஷ் வாஷரில் சாப்ப்பாட்டு பொருட்கள் அடைத்துக்கொண்டு விடுமாம்.

    அப்ப எதுக்கு டிஷ் வாஷர்? நாம நம்மவே கழுவி விடலாமே என்றேன்.

    அப்ப டிஷ் வாஷரை என்ன செய்யறதாம் ? என்று கெட்டாள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    ReplyDelete
  5. தென்றல் பத்திரிகையில்
    தென்றலாய் தவழ்ந்த நகைச்சுவை கதைக்கு
    வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. இப்போதும் அமெரிக்க வாசமா. இந்தியா வந்தாய்விட்டதா கதையை ரசித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    ராசி-விஷ்ணு புகழ் மேலும் பரவட்டும்!

    ReplyDelete
  8. ஆஹா.. ராசியின் அப்பாவித்தனம் ரசிக்கவைக்கிறது. தென்றல் இதழில் வெளியானமைக்குப் பாராட்டுகள் மேடம்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  10. சுவாரஸ்யம்... அருமை...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் . கடமுடா சத்தம் எங்கிருந்து வந்தது என்று புரிந்து விட்டது இனி வெந்நீர் வைத்தியம் தேவை படாது ராசிக்கு.

    ReplyDelete
  12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  13. சித்ரா11 November 2015 at 18:40

    ரொம்ப நாள் கழித்து ராசியை பார்க்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  14. பாராட்டிய அனைவருக்கும், தீபாவளி வாழ்த்துக் கூறிய சகோதரர்களுக்கும்
    என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றியைத் தாமதமாகத் தெரிவிப்பதற்கும் நண்பர்கள் என்னை மன்னிப்பீர்களா?

    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் விஷ்ணுவையும், ராசியையும் இணையத்தில் உலவ விடுங்கள். உங்களை மன்னிக்கிறோம்!

      Delete
    2. விடாமல் என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  15. வாழ்த்துகள். மீண்டும் ராசி, விஷ்ணு உலாவருவதைப் பார்த்து மகிழ்ச்சி.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்